நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

தமிழக நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, கொளக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

Update: 2022-05-17 00:45 GMT

கோப்பு படம் 

விவசாயம், குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு பெருகும் வகையில், தமிழக நதிநீர் இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என, திருச்சி மாவட்டம் கொளக்குடியைச் சேர்ந்த கிராம மக்கள், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், ஆண்டு தோறும், 200 டி.எம்.சி மழைநீர், காவிரி, வைகை, பாலாறு, தென்பெண்ணை வழியாக கடலில் வீணாக கலக்கிறது. சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகள் கடந்தும், இந்திய நதிகள் இணைப்பு திட்டம் கனவாகவே உள்ளது. அதனால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

முதல்கட்டமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் முதலில் இணைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள், நீர் தேக்கங்கள் ஆகியவற்றிற்கு மழைநீர் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு செய்வதால் விவசாயம், குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு பெருகும். அதன் காரணமாக, தமிழக நதிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

அதேபோல், இந்தியாவில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால், 2011ல் இருந்து ஜாதிவாரி கணக்கெடுப்பு வீடு, வீடாக நடத்தவில்லை. இந்த கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே, அனைத்து சமூக மக்களுக்கும் இடஒதுக்கீடு சமமாக வழங்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News