ஊராட்சி பிரதிநிதிகள்,அரசு அலுவலர்களுக்கான பயிற்சி: கலெக்டர் விஷ்ணு துவக்கி வைத்தார்
உயிரி பல்வகைமை சட்டம் 2002 ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
உயிரி பல்வகைமை சட்டம் 2002 ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு துவக்கி வைத்தார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று உயிரி பல்வகைமை சட்டம் 2002 ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு துவக்கி வைத்தார். பல்லுயிரின வளம் மனிதர்களுக்கு மிகவும் இன்றியமையாதது, மனித குலத்திற்கு அவசியமான சேவைகளை பல்லுயிரினங்கள் வழங்குகின்றன. பல்லுயிரின வளங்களைப் பாதுகாத்தால் அவைகளை வளங்குன்றா வகையில் பயன்படுத்துதல் மற்றும் பல்லுயிரின வளங்களில் கிடைக்கும் பலன்களை நியாயமாகவும், சமமாகவும் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு இந்திய அரசு 2002 ஆம் ஆண்டு உயிரி பல்வகைமைச் சட்டத்தினை இயற்றியது. தேசிய அளவில் தேசிய உயிரி பல்வகைமை ஆணையம்,மாநில அளவில் மாநில உயிரி பல்வகைமை வாரியம் மற்றம் உள்ளாட்சிப் பகுதிகளில் உயிரி பல்வகைமை மேலாண்மைக் குழுக்கள் ஆகிய மூன்றடுக்கு அமைப்பின் மூலம் இச்சட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஐவகை நிலப்பரப்புகளைக் கொண்டுள்ள திருநெல்வேலி மாவட்டம் பல்லுயிரின வளங்களைக் காடுகளில் மட்டுமல்லாது மனித ஆதிக்கம் மிகுந்த நிலப்பரப்பிலும் கொண்டுள்ளது. மாறுபட்ட இயற்கை வளங்களையும் பல்லுயிரினங்களையும் பயன்படுத்தும் சமூகங்கள் இம்மாவட்டத்தில் வசிக்கிறார்கள். இப்பல்லுயிர் வளங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை முறையாக நிர்வாகம் செய்ய வேண்டியது அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு உயிரிப் பல்வகைமைச் சட்டம் 2002 அன்று நடைமுறைப்படுத்துதல் குறித்த பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட வன அலுவலர் இரா.முருகன் உயிரிபல்வகைமை சட்டம் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். ஊரக வளர்ச்சி முகைமை தி.ட்ட இயக்குநர் ஆ.பழனி உயிரி பல்வகைமை சட்டத்தினை கிராம ஊராட்சியில் நடைமுறைபடுத்தப்பட்ட அவசியத்தினை எடுத்துக் கூறினார். முனைவர் அறிவடை நம்பி உயிரி பல்வகைமை சட்டம் குறித்த பயிற்சியினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஏட்ரி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி முனைவர் சுபத்ராதேவி, மூத்த ஆய்வாளர் மு.மதிவாணன் மற்றும் ஆராய்யசியாளர்கள் கலந்து கொண்டனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் 9 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டார்கள். பயிற்சியின் ஒரு பகுதியாக பங்கேற்பாளர்களை கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு களப்பயிற்சியும் வழங்கப்பட்டது. இப்பயிற்சிப் பட்டறையை அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம், மணிமுத்தாறு, தமிழ்நாடு மாநில உயிரிப் பல்வகைமை வாரியம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகைமை, திருநெல்வேலிஇணைந்து நடத்தினார்கள்.