மானூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் தீர்மானம்
விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் தீர்மானம்.
HIGHLIGHTS
எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எஸ்டிபிஐ கட்சியின் வேளாண் அணியின் மாவட்ட செயற்குழுகூட்டம் மானூரில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண் அணியின் மாநில தலைவர் ஷேக் அப்துல்லா, எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்டத்தின் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி மற்றும் துணைத் தலைவர் எஸ்.எஸ்.எ. கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தின் வேளாண் அணிக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
வேளாண் அணியின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவராக உழவன் மகன் எ.தாசில்கனி, துணைத் தலைவராக முல்லைகபீர், செயலாளராக பசுமை பீர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சம்சுதீன், அனவர்ஷா, தாழை முகையிதீன்அலி, பசுமை சித்திக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் வேளாண் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டாரங்களில் சின்ன வெங்காயம் அதிகப்படியாக விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார்கள். கொரோனா தோற்று தீவிரமாக இருந்த காலங்களில் ரூ80 முதல் ரூ100 என்ற விலையில் விற்று வந்த சின்ன வெங்காயம் தற்போது விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் ரூபாய் 10 ரூபாய் 15 என்ற விலையில் கொள்முதல் செய்து வருகிறார்கள். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றார்கள். விளைவித்த சின்னவெங்காயத்தை தோட்டங்களிலேயே தொடர்ந்து ஆறு மாதம் இருப்பு வைக்கும் நமது பாரம்பரிய தொழில் நுட்பத்தை விவசாயிகளுக்கு கற்றுத் தருவதற்கு வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமையன்பட்டியிலுள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில் சின்னவெங்காயத்தை பாதுகாத்து உரிய விலை கிடைக்கும் நேரத்தில் விவசாயிகள் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவு முதல் அறுவடை வரை கடன் பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அந்த கடனை அடைக்கும் விதமாக அரசு சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் சின்ன வெங்காயத்துக்கு நிகரான தொகையை விவசாயிகளுக்கு வங்கிக் கடனாக அரசு வழங்க வேண்டும்.
குளங்களை தூர் வாருவதற்காக அரசு நியமித்துள்ள குத்தகைதாரர்கள் சரிவர தூர்வார வேண்டும். செழியநல்லூர் குளம் தூர்வாரும் பணியை பார்வையிட்டு குறைகளை சுட்டிக்காட்டிய தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பிரதிநிதியை குத்தகைதாரர்கள் தாக்க முற்படுவது பெரும் கண்டனத்துக்குரியது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதுடன் தூர்வாரும் பணிகள் துரிதமாகவும், நியாயமாகவும் நடப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.