சுபநிகழ்ச்சிகள், விழாக்களை இணையதளத்தில் முன்பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவு
நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகள், விழாக்களை கண்டிப்பாக இணையத்தில் முன்பதிவு செய்ய ஆட்சியர் விஷ்ணு உத்தரவு.
HIGHLIGHTS
திருமண மண்டபங்கள், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகள், விழாக்களை கண்டிப்பாக இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
கொரோனாவின் மூன்றாவது அலையை மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட திருமண மண்டபங்கள், பொது இடங்கள், கோயில்கள், அரங்குகள் மற்றும் வீடுகள் ஆகிய இடங்களில் நடைபெறும் திருமணம் (அதிக பட்டசமாக 100 நபர்கள்), இறப்பு சம்பந்தமான நிகழ்வுகள் (அதிக பட்சமாக 50 நபர்கள்) போன்ற பொது மக்கள் அதிக அளவில் ஒரே இடத்தில் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்ட கொரோனா தடுப்பு இணைய தளமான https://covidcaretirunelveli.in என்ற முகவரியில் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விழாக்களும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களால் விழிப்பாகவும், முழுமையாகவும் கண்காணிக்கப்படும். மேலும், விழா நடைபெறும் இடத்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கும் அதிகமான எண்ணிக்கையிலோ அல்லது கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடவடிக்கைகளை சரியாக பின்பற்றப்படாமலோ இருந்தால் அந்த விழாவானது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு, விழா நடத்துபவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆகையால், திருநெல்வேலி மாவட்ட பொது மக்கள் அனைவரும் சமூக இடைவெளி, முகக்கவசம் மற்றும் அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி கொரோனாவின் மூன்றாம் அலையிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.