சட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்சி எடுப்பவர்கள் மீது நடவடிக்கை: மாநகராட்சி அறிவிப்பு
சட்டவிரோதமாக மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டால் குடிநீர் இணைப்பு நிரந்தரமாகத் துண்டிக்கப்படும்
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றுப் படுகையான கொண்டாநகரம், சுத்தமல்லி, குறுக்குத்துறை, மணப்படைவீடு, திருமலைக்கொழுந்துபுரம், தீப்பாச்சியம்மன் கோவில், கருப்பந்துறை ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 15 தலைமை நீரேற்றும் நிலையங்களில் உள்ள 46 நீர் உறிஞ்சு கிணறுகளில் இருந்து தினசரி 47.50 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு அதனை 71 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் மற்றும் 13 எண்ணம் நீர் ஊந்து நிலையங்கள் வாயிலாகவும் சராசரி 100 லிட்டர் தனிநபர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
மாநகரில் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் தேவைக்கு அதிகமாகவும், ஒரு சில பகுதிகளில் குறைவாகவும் குடிநீர் கிடைக்கப் பெறுவது ஆய்வின் போது கண்டறியப்பட்டது. எனவே, மாநகரில் அனைத்துப் பகுதிகளிலும் சீரான முறையில் குடிநீர் கிடைப்பதற்கு மாநகராட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி தன்னிச்சையாக மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட குடிநீர் பிரதான குழாயில் (Pumping Main) இருந்து நேரடியாக வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு பெறப்பட்டிருப்பின், சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் நேரடியாக தாமாகவே முன்வந்து மாநகராட்சியினை அணுகி மேற்படி விபரத்தினை 10 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி விவரத்தினை தெரிவிக்கும் பட்சத்தில் கட்டிடத்திற்கு குடிநீர் பகிர்மானக் குழாயில் (Distribution Main) இருந்து குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு மாநகராட்சியால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .
மேலும், இதுதொடர்பாக மாநகராட்சி மூலம் தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளும் போது, மேற்படி குடிநீர் பிரதான குழாயில் (Pumping Main) இருந்து நேரடியாக குடிநீர் பெறப்படுவது கண்டறியப்பட்டாலும், வீட்டுக்குடிநீர் இணைப்புகளில் சட்டவிரோதமாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டாலும் மேற்படி கட்டிடத்திற்கான குடிநீர் இணைப்பானது நிரந்தரமாக துண்டிப்பு செய்யப்படுவதோடு, குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, வீட்டுக் குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுபவர்கள் உடனடியாக மேற்படி மின்மோட்டாரை அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது குடிநீர் இணைப்பில் கிடைக்கப் பெறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்வதோடு, மேற்கண்ட சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என அவர் தெரிவ்துள்ளார்.