தாமிரபரணி நதியில் தூய்மைபடுத்தும் பணி: தன்னார்வலர்கள், மாணவர்கள் பங்கேற்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதியில் 57 இடங்களில் தூய்மைபடுத்தும் பணியில் தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதியினை தூய்மைபடுத்தும் பணி தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற தலைப்பில் மாபெரும் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த தூய்மைபணி பாபநாசம் முதல் சீவலப்பேரி வரை 57 இடங்களில் நடைபெற்றது.
இப்பணிகளை தன்னார்வலர்களுடன் இணைந்து மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்று தாமிரபரணி நதிக்கரையோரங்களை தூய்மைப்படுத்தினர். இப்பணியில் 4,700 கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகளும், 500 தன்னார்வலர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இப்பணிகளை ஆர்வமுடன் செய்தனர்.
தூய்மைப்பணி நடைபெற்ற இடங்களில் தாமிரபரணி சுற்று சுழலும் தாமிரபரணியும் என்ற தலைப்பில் மாணவ- மாணவிகளுடனான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன.
மேலும் விழிப்புணர்வு ஒவியம் வரைதல், கலைப்போட்டிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்துதல் போன்ற நிகழ்ச்சிகள் தூய்மைப்பணி நடைபெற்ற இடங்களில் நடைபெற்றது. பல்வேறு விழிப்பணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பங்கேற்ற இடங்களில் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சில் மாணவ- மாணவிகள்,ஆசிரியர் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு இப்பணிகளை ஆர்வமுடன் செயல்படுத்தினர். தமிழக முதலமைச்சர் அறிவுரையின்படி பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு மஞ்சள் பை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.