நெல் அறுவடை: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர் விபரங்களை விவசாயிகள் அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் உள்ள மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த காலத்திற்குள் அறுவடைசெய்ய உதவிடும் வகையில், அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை விவசாயிகளே நேரடியாகத் தொடர்பு கொண்டு பயன்பெற தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதாவது, தனியாருக்குச் சொந்தமான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 21நெல் அறுவடை இயந்திரங்கள் உட்பட 4456 நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர் பெயர், அவர்களது தொடர்பு எண், இயந்திரத்தின் பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் மாவட்டம் வாரியாக மற்றும் வட்டாரம் வாரியாக உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்தகாலத்தில் அறுவடைசெய்வதற்குப் போதுமான வேலையாட்கள் இல்லாத நிலையில் அறுவடைப் பணிகளை உரியகாலத்தில் செய்வதற்கும் மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்களின் பங்கு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.
ல் அறுவடை காலங்களில் அந்தந்த பகுதிகளின் தேவைக்கு ஏற்ப தனியார் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பதோடு விவசாயிகள் அறுவடை இயந்திரங்களைப் பெறுவதற்காக இடைத்தரகர்களை அணுக வேண்டியும், வாடகையோடு தரகுக் கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டி உள்ளதால் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிக்கப்படுவதோடு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது.
அதனைத் தவிர்த்திட அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக தனியார் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தனியாருக்குச் சொந்தமான 3909 எண்கள் டயர் வகை மற்றும் 547 எண்கள் டிராக் வகை அறுவடை இயந்திரங்கள் என மொத்தம் 4456 அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களின் விபரங்கள் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உழவன் செயலியில் பதிவேற்றப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 20 டயர் வகை மற்றும் ஒரு டிராக் வகை என மொத்தம் 21 தனியார் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் விபரங்களும் உழவன் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டாரம் அல்லது அருகாமை மாவட்டத்தில் உள்ள அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை செல்போன் எண் மூலம் நேரடியாகத் தொடர்புகொண்டு அறுவடை இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி அறுவடைப் பணிகளை உரியகாலத்தில் மேற்கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.