தூத்துக்குடி சிப்காட் குடோனில் தீ விபத்து
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் தீ விபத்து :- ரூ.20 கோடி மதிப்புள்ள துணிமணிகள், காகித பண்டல்கள் எரிந்து நாசம்
HIGHLIGHTS
சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிகால் ஏற்றுமதி - இறக்குமதி நிறுவன கிளை தூத்துக்குடி-மதுரை புறவழிச்சாலை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில், 50 ஆயிரம் சதுரடி பரப்பும், 200 மீட்டர் நீளத்தில் 8 வாசல்கள் கொண்ட பெரிய ஏற்றுமதி பொருள்கள் தேக்கும் குடோன் தனியே உள்ளது. இதில் இன்று பகல் 2 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் குடோனில் ஒரு பகுதியில் பற்றி எரிந்த தீ மற்ற 7 வாசல் பகுதிகளுக்கும் மளமளவென பரவியது.
இந்த தீ விபத்து குறித்து தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்து தூத்துக்குடியில் துறைரீதியான ஆய்வில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு துறை துணைத்தலைவர் விஜயக்குமார், மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமார் மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிகால் நிறுவன ஏற்றுமதி குடோனில் ஆயத்த ஆடைகள், பொம்மைகள், காகித பண்டல்கள், ரப்பர் சீட்டுகள் ஆகியவை தீயில் எரிந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தீயை அணைக்கும் பணியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 3 தண்ணீர் நிரப்பும் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறோம். இதுபற்றிய முழு விசாரணை நடத்திய பிறகே சேத மதிப்பு பற்றிய விவரம் தெரியவரும் என்றார்.
தீ விபத்து குறித்து ஏற்றுமதி நிறுவன தரப்பிலிருந்து கிடைத்த தகவலின்படி, தீ விபத்தில் எரிந்து நாசமான பொருட்களின் மொத்த மதிப்பு 20 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.