தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது-நகைகள் மீட்பு
தூத்துக்குடியில் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக பல்வேறு வீடுகளின் கதவை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதில் தொடர்புடைய கொள்ளையனை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தூத்துக்குடி விவேகானந்தா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த வேலூர் மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டையை சேர்ந்த சாந்தகுமார் மகன் அப்பன்ராஜா (29) என்பவரை கைது செய்தனர்.
இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதத்துக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவரை தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 பவுன் தங்கநகைகள், 3 எல்.இ.டி. டி.விக்கள், 4 செல்போன்கள், 2 ஹோம் தியேட்டர்கள் உள்ளிட்ட ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.