தனியார்மயமாக்கலை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வங்கிகள் தனியார்மயமாக்கலை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்றும் நாளையும் நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நடத்தி வருகின்றன.
இதில், தூத்துக்குடி பீச்ரோட்டில் ஸ்டேட் பேங்க் அலவலகம் முன்பு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வங்கிகள் தனியார்மயமாக்கலை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமை ஒருங்கிணைப்பாளர் அப்துல்காதர் கூறுகையில், வங்கிகள் தனியார்மயமாக்கலை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 245 வங்கிகள் மூடப்பட்டு, 1000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் மூலம் 1200 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் என்றார்.