திருவாரூரில் தாயும் மகளும் தூக்கு மாட்டி தற்கொலை? : போலீசார் விசாரணை
திருவாரூரில் தாயும் மகளும் ஒரே புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
திருவாரூர் அருகே, தாயும் மகளும் ஒரே புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடல்களை மீட்டு கொலையா, தற்கொலையா என தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட விஷ்ணு தோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (65). இவரது மகள் ஜோதி (40) கணவனை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். ஜோதியின் அக்கா மகன் முகிலன் (19) என்பவரை வளர்த்து வருகின்றனர். ஜோதி தனியார் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் முகிலன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஜோதியும், தமிழரசியும் ஒரே புடவையில் தூக்கில் தொங்கி உள்ளனர். மேலும் வீடு முழுவதும் ரத்தக்கரை இருந்ததால் உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தெரிவித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் நேரில் விசாரணை மேற்கொண்டு உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த இருவரது மரணம் கொலையா? தற்கொலையா? என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.