திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
HIGHLIGHTS
சைவ சமய தலங்களில் முதன்மை தலமாக திருவாரூர் தியாகராஜர் கோயில் விளங்குகிறது. கடவுள்களுக்கு எல்லாம் அரசராக தியாகராஜர் விளங்குகிறார். பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாக இத்தலம் விளங்குகிறது.
இத்தலத்தின் முக்கிய திருவிழாவான பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் மாசிமாத அஸ்த நட்சத்திரமாகிய இன்றைய தினம் நடைபெறுகிறது . முதலாவதாக பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ரிஷப உருவம்,திரிசூலம்,மங்கலச் சின்னங்கள் வரையப்பட்ட கொடியானது வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது கோபுரங்களில் இருந்து மலர்கள் தூவி கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் பங்குனி திருவிழாவில் வெவ்வேறு வாகனங்களில் தினமும் இரவு தியாகராஜரின் வீதி உலா நடைபெறும்.
இதன் முக்கிய நிகழ்வான உலகப்புகழ்பெற்ற ஆழித் தேரோட்டம் பங்குனி ஆயில்ய நட்சத்திரமான மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஆழித்தேர் கட்டுமான பணிகள் கோவில் நிர்வாகம் சார்பாக தீவிரமாக நடைபெற்று வருகிறது .இந்நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.