திருவாரூரில் உடனடி பணி வழங்க கோரி செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்
திருவாரூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க கோரி செவிலியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்.
HIGHLIGHTS
கொரோனா பேரிடர் காலத்தில் ஆபத்தான சூழ்நிலையில் பணிபுரிந்த செவிலியர்கள் மற்றும் ஈசிஜி டெக்னீஷியன்கள் கடந்த மாதம் 31 ஆம் தேதியோடு தமிழக அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த செவிலியர்கள் மற்றும் ஈசிஜி டெக்னீசியன்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செவிலியர் சங்கத்தின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட செவிலியர்கள் மற்றும் ஈசிஜி டெக்னீசியன்கள் கொரோனா காலத்தில் பணியில் சேர்ந்த தங்களை பணி நிரந்தரம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசு தற்போது எங்களை பணி நீக்கம் செய்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே உடனடியாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல தங்களுக்கு பணி வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.