திருவாரூர் மாவட்ட கிராமங்களில் மழை விட்டும் நீர் வடியாததால் மக்கள் அவதி
திருவாரூர் மாவட்டத்தில் மழை விட்டும் நீர் வடியாததால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
HIGHLIGHTS
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி மாநிலம் முழுவதும் பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் காத்தாயி அம்மன் நகர், வசந்தம் நகர், காந்தி நகர், செந்தமிழ் நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகர்ப்பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் இந்த பகுதியை சுற்றிலும் சூழ்ந்து உள்ளது. சாலைகளில் மேடுபள்ளம் காரணமாக தண்ணீர் சூழ்ந்து நடக்க முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் இந்தப் பகுதியில் இருந்து திருவாரூர் நகருக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் கொசுத் தொல்லையால் அவதிப்படும் மக்கள் பகல் நேரங்களில் பாம்பு உள்ளிட்ட பூச்சிகள் வீடுகளுக்குள் படை எடுப்பதால் அச்சத்துடன் தங்கள் குழந்தைகளை பாதுகாத்து வருகின்றனர். எனவே உடனடியாக இந்த பகுதியில் சூழ்ந்த தண்ணீரை அகற்றி சாலை வசதி, வடிகால் வசதி செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.