திருவாரூர் அருகே கீழே விழுந்து விழுந்து வலம் வரும் வினோத தேரோட்ட திருவிழா
திருவாரூர் அருகே அம்மன் தேர் கீழே விழுந்து விழுந்து வலம் வரும் விசித்திரமான தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
திருவாரூர் அருகே உள்ள தப்பளாம்புலியூர் கிராமத்தில் பிடாரி குளுந்தாளம்மன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
இங்குபங்குனி மாதம் ஒன்றாம் தேதி முதல் பல்வேறு வேலை பாடுகளுடன் கூடிய 30 அடி உயரத்தில் அமைந்த அழகிய தேரில் அம்மன் வீதி உலா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று மூன்றாவது நாள் தேரோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பங்கேற்றனர். ஒவ்வொரு கிராம மக்களும் தேரினை சுமந்து செல்ல வேண்டும் என்பது 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் ஒரு விதிமுறையாகும்.
வீதி உலா செல்லும் அம்மன் தேரை தூக்க கூடிய தொண்டர்கள் எங்காவது தூக்க முடியாத நேரத்தில் அதனை அப்படியே கீழே போட்டு விடுவார்கள் அப்போது அங்கு ஒரு கிடாவெட்டி காவு கொடுத்துவிட்டு பிறகு விழுந்த இடத்தில் உள்ள பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தேரை சுமந்து செல்வார்கள். அடுத்ததாக அவர்களால் தூக்க முடியாத இடத்தில் தேர் விழும் அப்போது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தேரை சுமந்து செல்வார்கள் ஒவ்வொரு முறையும் தேர் விழும் இடத்தில் ஒரு ஆடு பலியிடப்படும்.
இவ்வாறு மூன்று நாட்களாக சுற்றி வரும் அம்மன் மாலை கோவிலுக்கு அருகில் ஒரு முறை விழுந்து பிறகு காப்பு அறுக்கப்பட்டு கோவிலை சுற்றி வரும்போது இறுதியாக ஓரிடத்தில் அம்மனின் தேர் கீழே விழும், இறுதியில் அம்மன் தேரை கீழே போடும் போது இருபுறமும் கிராம மக்கள் ஒருவரை ஒருவர் அந்தப்பக்கம் தேரினை விழ வைப்பதா.... இந்தப்பக்கம் தேரினை விழ வைப்பதா .... என கடுமையாக போட்டி போட்டுக் கொண்டு இறுதியில் ஒரு புறம் தேர் விழும்,அதன் பிறகு அம்மனை பூஜித்து கருவறையில் கொண்டு வைப்பார்கள்.
இந்த முறை இறுதியில் நடந்த தேர் விழும் சமயத்தில் இரு தரப்பும் ஆவேசப்பட்டு கடுமையாக தள்ளிக்கொண்டு இருந்தன. அதில் ஒரு தரப்பு வெற்றி பெற்றது. இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பு கடுமையான கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்த பிறகு அனைவரும் ஒற்றுமையாக சாமியை தரிசனம் செய்தார்கள். மூன்று நாட்களாக இந்த திருவிழாவில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.