தஞ்சை தேர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சிபிஎம் பாலகிருஷ்ணன் ஆறுதல்
தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்.
HIGHLIGHTS
களிமேடு விபத்தில் அரசையோ, அரசு அதிகாரிகளை குற்றம்சாட்டுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை என தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.
தஞ்சாவூர் அருகே களிமேட்டில், நேற்று முன்தினம் நடந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்தது இல்லை, எதிர்பாராமல் நடைபெற்ற விபத்து. இதை விபத்தாக தான் பார்க்க வேண்டும், அதை விட்டுவிட்டு அரசு மீது, அதிகாரிகள் மீது குற்றம் சுமத்த கூடாது. எந்த விதத்திலும் அரசு பொறுப்பாகாது. இதில் அரசையோ, அரசு அதிகாரிகளை குற்றம்சாட்டுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை, எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வழங்கியுள்ள நிவாரணம் போதுமானதாக இருக்காது. எனவே அவர்களுக்கு நிவாரணம் கூடுதலாக வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.