திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படையினர் நான்கு பேரை தஞ்சையில் மடக்கிப்பிடிப்பு
தஞ்சையில் பதுங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படையினர் நான்கு பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
HIGHLIGHTS
தஞ்சை மாவட்டம் நடுக்காவேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தஞ்சை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில், போலீஸ்சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய் , உரிய நடவடிக்கை எடுக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், பிரகாசம், போலீஸ்காரர்கள் உமாசங்கர், சிவக்குமார், அருண், அழகு, கண்ணதாசன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கு தங்கி இருந்தவர்கள் தப்பி ஒட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த புளியங்குளம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த கனகராஜ் மகன் ஊசிபாண்டியன் (வயது 37), பாளையங்கோட்டையை அடுத்த மேலபட்டம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த கணசேன் மகன் சிவா என்ற நாராயணன் (26), நாங்குநேரி வாகைக்குளம் நடுத்தெருவை சேர்ந்த சிவகுரு மகன் தீபக்ராஜா (27), தச்சநல்லூர் மேலக்கரை மேற்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (34) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் ஒவ்வொருவர் மீதும் தலா 3-க்கும் மேற்பட்ட கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீஸ்காவலில் எடுத்து விசாரணை நடத்தியவர்களை கூட இவர்கள் கொலை செய்துள்ளனர். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாரக நடுக்காவேரியை சேர்ந்த தினேஷ் (24) என்பவரையும் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, திருநெல்வேலி மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் கண்ணன். காண்டிராக்டரான இவர் கடந்த மாதம் 12-ந்தேதி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சை வந்து தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.