நெல் கொள்முதல் ஆன்லைன் பதிவு: ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்கள் தீவிரம் ஆகும் என விவசாயிகள் தெரிவித்தனர்
HIGHLIGHTS
ஆன்லைன் நெல் கொள்முதல் முன்பதிவை ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்த இழப்பீடு தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க வேண்டும். 22% ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், நெல் கொள்முதல் செய்வதில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அறநிலை துறை இடங்கள் என்று சொல்லி விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.