தண்ணீர் இன்றி காயும் சம்பா பயிர்: வேதனையில் விவசாயிகள்
தஞ்சாவூர் பகுதி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிருக்கு தண்ணீர் இல்லாமல் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தஞ்சாவூர் பகுதி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிருக்கு தண்ணீர் இல்லாமல் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு புறம் மழையால் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா பயிர் அறுவடை செய்யாமல் கைவிடப்பட்ட நிலையில், மறுபுறம் தண்ணீரின்றி வறட்சியால் காய்ந்து வரும் பயிரை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் வேதனையில் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா தாளடி சாகுபடி சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த கனமழையால் மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் அறுவடை செய்யாமல் விளைநிலத்தில் அப்படியே கைவிடும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் பின்பட்ட சாகுபடியை மேற்கொண்ட விவசாயிகள் தற்போது தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் மேடான பகுதிகளான பூதலூர், செங்கிப்பட்டி, ஏழுப்பட்டி, முன்னையம்பட்டி ஆகிய பகுதிகளில் மாயனூரில் இருந்து பிரிந்து வரும் கட்டளை மேட்டு வாய்க்கால் நீரை நம்பி சாகுபடி செய்து வருகின்றனர். 90 நாள் கால அளவு கொண்ட சம்பா பயிரை சாகுபடி செய்து, தற்போது பால் பிடித்து கதிர் வரும் நிலையில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால், பயிர்கள் முற்றிலும் கருகி வருகிறது.
இதனால், இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ' ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து இந்த ஆண்டு சாகுபடியை மேற்கொண்டோம். ஆனால், பால் பிடித்து கதிர் வரும் நேரத்தில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பயிர்கள் அனைத்தும் கருக்காவாக மாறி கருகி வருகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்னும் தொடர்ந்து 20 நாட்கள் தண்ணீர் வழங்கினால் மட்டுமே பயிரை காப்பாற்ற முடியும். இல்லை என்றால் அப்படியே கைவிட வேண்டிய தான். கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்துதான் சாகுபடி மேற்கொண்டோம். தற்போது தமிழக அரசு தண்ணீரை நிறுத்தியதால் எங்கள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
ஒருபுறம் டெல்டா மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அழுகி அதனை அறுவடை செய்ய முடியாமல் கைவிடப்பட்ட நிலையில், மறுபுறம் வறட்சியால் காய்ந்து வரும் பயிர்களை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர்.