வீரகேரளம்புதூர் அருகே காட்டு பன்றி தாக்கி ஒருவர் காயம்
வீரகேரளம்புதூர் அருகே காட்டு பன்றி தாக்கியதில், விவசாயி படுகாயம் அடைந்தார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், சுரண்டை, வீரகேரளம்புதூர் அருகில் உள்ள கிராமம் அதிசயபுரம். இங்கிருந்து வீராணம் செல்லும் ரோட்டில் வடபுரம் வெள்ளக்கல் பறம்பு என்னும் சிறிய குன்று உள்ளது. இதனை சுற்றிலுமுள்ள அதிசயபுரம், ராஜகோபாலப்பேரி, வீரகேரளம்புதூர், அச்சங்குன்றம், லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இங்கே வயல்கள் உள்ளன.
இந்த பறம்பில் உள்ள காட்டுப் பன்றிகளால், இங்கு உள்ள விவசாயிகளின் விலை பொருட்கள் பாழ் படுத்தப்படுவது பல காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவும். பறம்பை சுற்றிலும் வேலி அமைத்து விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் ஊடுருவுவதை தடுக்கவும், பல காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அரசு இதுவரையிலும் செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில், நேற்று மாலையில், அதிசயபுரம் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் பாண்டி என்ற விவசாயி, தன்னுடைய விளைநிலத்தில் மாங்கன்றுகளை நடவு செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஓடிவந்த காட்டுப்பன்றி, அவரது கையை கடித்து காயப்படுத்தியது. சுதாரித்துக்கொண்ட அமிர்தம் பாண்டி காலால் பன்றியை உதைத்தார். உடனடியாக பன்றி அங்கிருந்து ஓடி விட்டதாக அமிர்தம் பாண்டி தெரிவித்தார்.
பின்னர், வீரகேரளம்புதூர் அரசு மருத்துவமனைக்கு வந்த அவர், இரு கைகளிலும் காட்டுப்பன்றியால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். வன விலங்கு நடமாட்டத்தை தடுக்க, பரம்பை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து விவசாயிகளை காக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.