பாஜக, ஆர்எஸ்எஸ் கருத்தை ஆளுநர் பிரதிபலிக்கிறார்.. தவ்ஹீத் ஜமாத் தலைவர் குற்றச்சாட்டு...
பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்தை தமிழக ஆளுநர் பிரதிபலிக்கிறார் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தென்காசி கிழக்கு கிளையின் சார்பில் நடைபெற்ற சமுதாய பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற அந்த அமைப்பின் மாநில தலைவர் சுலைமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்றதில் இருந்து எண்ணிலடங்கா சிரமங்களை சிறுபான்மை மக்களான இஸ்லாமிய மக்களுக்கு கொடுத்து வருகிறது. முத்தலாக் தடைச் சட்டம், CIA என இஸ்லாமியர்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு மூன்றரை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அதை அதிகரித்து தருவதற்கு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கோரிக்கை விடுக்கப்பட்ட போது அதிகரித்து தருவதாக கூறி ஜெயலலிதா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் மரணமடைந்த பிறகு தொடர்ந்து அதிமுக அரசில் கோரிக்கை விடுக்கப்பட்டது இந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போதுள்ள திமுக அரசிடமும் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை குறித்து பரிசளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் திமுக அரசுக்கு எதிராக தமிழக முஸ்லிம்கள் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நாங்கள் நேரடி அரசியல் ஈடுபட மாட்டோம். எந்த ஒரு கட்சிகளையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்ய மாட்டோம் என்பது எங்களுடைய ஜமாத்தின் நிலைப்பாடு. தமிழகத்தில் கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகளை அறிவிப்பதால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.
மது உள்ளிட்ட எந்த ஒரு போதை வஸ்துக்களையும் முழுமையாக ஒழிக்க வேண்டும். தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பாஜகவின் தலைவர் போல செயல்படுகிறார் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆளுநரின் பேச்சும் செயல்பாடும் அவ்வாறு உள்ளது. தமிழின் அருமை பற்றி தெரியாத ஆளுநர் ரவி தமிழகம் என்று சொல்வதுதான் நல்லது, தமிழ்நாடு என்று சொல்வது சரியல்ல என கூறுவது சரியில்லை. அவர், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக உள்ளது என சுலைமான் தெரிவித்தார்.