சுரண்டை: வணிக வளாகங்களில் கோட்டாட்சியர் ஆய்வு
சுரண்டையில் , வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கோட்டாட்சியர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிகளில், பல்வேறு ஆய்வு பணிகளுக்காக வந்த தென்காசி கோட்டாட்சியர் ராஜேந்திரன், அண்ணா சிலை, பேருந்து நிலையச் சாலை, மற்றும் வணிக நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் வணிக நிறுவன உரிமையாளர்களிடம், முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், வாடிக்கையாளர்களும், ஊழியர்களும், சமுக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கினார். தொடர்ந்து, முகக்கவசம் அணியாமல் பணிபுரிந்த கடைகளில், அபராதம் விதித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோட்டாட்சியர் ராஜேந்திரன், கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தாலும், அபாயம் குறையவில்லை. ஆகவே பொதுமக்களும், வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
ஆய்வின் போது, வீகேபுதூர் வட்டாட்சியர் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.