பக்கெட்டில் சாக்கடைக் கழிவுகளை அள்ளிக்கொண்டு வந்த நகர் மன்ற உறுப்பினர்!
சாக்கடை கழிவுகளை அகற்றாத நகராட்சியைக் கண்டித்து நகர் மன்ற உறுப்பினர் பக்கெட்டில் கழிவுகளை அள்ளிக்கொண்டு வந்தார்
HIGHLIGHTS
சாக்கடை கழிவுகளை அகற்றாத நகராட்சி - பக்கெட்டில் சாக்கடை கழிவை அள்ளி வந்த நகர்மன்ற உறுப்பினரால் பரபரப்பு
தென்காசி நகராட்சியில் சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்யாத ஆணையாளரை கண்டித்து சாக்கடை கழிவுகளை பக்கெட்டில் அள்ளி வந்து ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட நகர் மன்ற உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்தில், தென்காசி நகராட்சியானது 33 வார்டு பகுதிகளை கொண்டதாகும். இங்கு உள்ள வார்டுகளில் கழிவு நீர் ஓடைகளை சரிவர சுத்தம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. நகராட்சியின் தலைவராக திமுகவை சேர்ந்த சாதிர் பதவி வகித்து வரும் நிலையில், 10வது வார்டு பகுதியில் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படவில்லை எனவும் வாருகால்கள் சரி செய்யப்பட வேண்டும் எனவும் மன்ற கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர் ராசப்பா கோரிக்கை வைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 3 மாதமாக 10 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாறுகால் சுத்தம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நகர்மன்ற உறுப்பினர் முகம்மது ராசப்பா அப்பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளை பக்கெட்டில் எடுத்துக் கொண்டு இன்று நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் அறை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சாக்கடை கழிவுகளுடன் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டார். இதனால் தென்காசி நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி காணப்பட்டது.