பழைய குற்றாலத்தில் தென்காசி ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கடந்த எட்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 17ம் தேதி வரை மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குற்றால அருவிகளில் வரும் 17 ம் தேதி வரை குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் ஆவலோடு குற்றாலம் வருகை தந்தனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தின் தடை காரணமாக அருவி அருகே யாரையும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து மெயின்அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது.
இந்நிலையில் பழைய குற்றாலத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் செய்யப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளம் குறையும் வரை அருவி கரைகளில் மற்றும் அருவி பகுதிகளில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.