சிவகங்கை -மேலூர் சாலை உணவகத்தில் இளைஞர் வெட்டிக்கொலை
சிவகங்கை -மேலூர் சாலை உணவகத்தில் இளைஞர் ஒருவரை 7பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
சிவகங்கை காந்தி வீதியில் துணிக்கடை நடத்தி வந்தவர் மணிவண்ணன். இவரது அண்ணன் இளங்கோ. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிவகங்கை- மேலூர் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிரே புதிய உணவகம் திறந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் அண்ணன் உணவகத்திற்கு சென்ற மணிவண்ணன் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, திடீரென உணவகத்திற்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் மணிவண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளது. இதில் மணிவண்ணன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கொலையான மணிவண்ணனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், கொலை செய்து விட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத நபர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.