தமிழகத்தில் மருத்துவ இடங்கள் இரண்டு மடங்காக அதிகரிப்பு : பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக மக்கள் மேல் 7 வருடங்களாக பிரதமருக்கு அன்பு பாசம் காதல் குறையாமல் இருந்து வருகிறது என்றார் பாஜக தலைவர் அண்ணாமலை
HIGHLIGHTS
தமிழகத்தில் மருத்துவ சீட் சென்ற 2014ல் இருந்து 2021 வரை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
சிவகங்கையில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 292வது பிறந்த தின விழா இன்று சிவகங்கையில் உள்ள மணி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு, வேலு நாச்சியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழக மக்கள் மேல் 7 வருடங்களாக பிரதமருக்கு அன்பு பாசம் காதல் குறையாமல் இருந்து வருகிறது. வேலு நாச்சியார் போன்ற அற்புதமான தலைவர்களின் புகழை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதுதான் பாஜகவின் நோக்கம். ராஜீவ் கொலை குற்ற வழக்கில் 7 பேரின் விடுதலை சட்டபூர்வமான முறையில் நடந்துகொண்டிருக்கிறது, இதில் யாரும் உணர்ச்சி வசப்படக்கூடாது .டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான காப்பீட்டு தொகை அவரவர் வங்கி கணக்குகளுக்கு வரத்தொடங்கியுள்ளது.,
தமிழகத்திற்கான வெள்ள நிவாரண தொகை உரிய முறையில் கணக்கிட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தவர்,தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான இடம் 2014 இல் இருந்து, 2021 வரையிலும்,இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.ராஜேந்திர பாலாஜி குறித்த கேள்விக்கு,அவர் எங்கள் கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். அவர் விரைவில் குற்றமற்றவர் என நிரூபித்து வருவார். அதுவரை காத்திருக்க வேண்டும் என்றார்.