இராணிப்பேட்டையில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
இராணிப்பேட்டை, விசி மோட்டூர் ஏரியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த விசி மோட்டூர் ஏரியில் மாவட்ட பேரிடர் மேலாண்மை, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாவட்ட தீயணைப்பு மீட்பு படை ஆகியோர் இணைந்து வெள்ளத்தில் மற்றும் நீர்நிலைகளில் சிக்கியவர்களை பாதுகாப்புடன் மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்து பேசினார்.
அதில், இன்றைய சூழலில் பருவநிலை மாற்றங்களால் மிகப்பெரிய பேரிடர்களால் பேரழிவுகள் ஏற்பட்டு வருவதை அறிவோம். அவை, பெருவெள்ளப் பெருக்கு, மலையில் மண்சரிவு, காட்டுத்தீ, பனிப்பாறை உருகுதல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்கள் தொடர்ந்து ஏற்படுகிறது. இயற்கைப்பேரிடர்கள், எதிர்ப்பார்க்காத அளவில் உலக முழுவதும் பருவநிலை மாற்றத்தால் அதிகரித்து வருகிறது.
எனவே, அதுபோன்ற நிகழ்வுகளில் பாதுகாத்துக் கொள்வது, சுதாரித்து தப்பிப்பது ஆகியவை இதுபோன்ற ஓத்திகை நிகழ்ச்சிகளில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும், தமிழக அரசு பேரிடர் வெள்ள பாதிப்புகளின் போது எவ்வாறு மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் என்று இது போன்ற ஒத்திகைகள் மூலமேயாகும். ஆகவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ஒத்திகைகளை நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடத்தி வருகின்றது.
அதன்படி, நமது மாவட்டத்தில்,அனைத்து கிராமத்திலும் முதல் தகவல் மற்றும் உதவிகளை அளிப்பவர்கள் (first responders) சுமார் 500பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பேரிடர் காலங்களில் செயல்படுவது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பணியானது, மழை வெள்ளக்கால பேரிடர் மட்டுமின்றி, மற்ற பேரிடர் பாதிப்புகள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் போது அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பதும் முன்னின்று பாதுகாப்பு மற்றும் மீட்பு வேலைகளில் அவர்கள் ஈடுபடுவதாகும்.
எனவே, வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பொதுமக்கள் ஒத்திகை மூலம் தெரிந்து கொண்டு நீர்நிலைகளில் சிக்கியவர்களை மீட்க வேண்டும். தற்போது பல காரணங்களால் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதில், பிளாஸ்டிக் பொருட்களும் காரணமாக உள்ளது. எனவே பொதுமக்கள், சமூக விழிப்புணர்வுடன் அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். என்று அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து மீட்புப் படையினர், தீயணைப்பு மீட்பு படையினர் இணைந்து நீரில் மூழ்கியவரை மோட்டார் பொருத்திய போட் மூலம் சென்று குதித்து மீட்டு மூழ்கியவருக்கு முதலுதவி சிகிச்சையளிப்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகைகளை பொதுமக்களிடையே செய்து காட்டினர். பின்னர், தொடர் பேரிடர் காலத்தில் மக்கள் தினமும் பயன் படுத்தும் துணி, சோப்பு, கண்ணாடி, பேஸ்ட், பிரஷ் மற்றும் டவல் ஆகிய பொருட்கள் அடங்கிய பெட்டிகள் 30பேருக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்அலுவலர் ஜேநச்சந்திரன், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக்குழு துணைத்தலைவர் வைத்தியலிங்கம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமிநாரயணன், வாலாஜாப்பேட்டை வட்டாட்சியர் ஆனந்தன், தேசிய பேரிடர் மீட்பு ஆய்வாளர் ரோகித் குமார், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, காவல் ஆய்வாளர் காண்டீபன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.