இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவ மகளிருக்கு கடற்பாசி வளர்ப்பு திட்டம் தொடக்கம்
மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் மீனவ மகளிருக்கு கடற்பாசி வளர்ப்பு திட்டம் விரைவில் தொடக்கம்
HIGHLIGHTS
ராமநாதபுரம் மாவட்ட மீனவ மகளிருக்கு மாற்று வருவாய் ஈட்டித்தரும் கடற் பாசி வளர்ப்பு திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவிவுடன் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 181 மீனவ கிராமங்கள் உள்ளன. கடலோர மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ மகளிர் கடற்பாசி சேகரிப்பு, வளர்ப்பு மாற்று வருமானம் அளிக்கும் தொழி லாக செய்து வருகின்றனர். சம்பை, சங்குமால், ஓலைகுடா, மாங்காடு, சின்ன பாலம், வேதாளை, மங்களேஸ்வரி, கீழக்கரை, வடகாடு, அரி யாண்குண்டு, தண்ணீரூற்று கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலான மகளிர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பாக் நீரிணைப்பு கடல் பகுதிகளான சோழியக்குடி, புதுப்பட்டினம், தொண்டி, டி-நகர் பகுதிகளில் மாற்று வருமானத் தொழிலில் ஈடுபடும் மீனவ குடும்பங்கள் கயிறு கட்டி கடற்பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முனைக்காடு, வேதாளை, தோணித்துறை சம்பை உள்ளிட்ட பகுதி மீனவ மகளிர் மிதவை மூங்கில் மூலம் கடற்பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வளர்க்கும் கப்பா பைகஸ் என்ற கடற்பாசி வகைக்கு சந்தை மதிப்பில் நல்ல போட்டி உள்ளது. இதனால்,தனியார் நிறுவனம் விதை பாசி வழங்கி 45 நாட்களுக்கு பின் அறுவடை செய்யப்படும் பாசியை கொள்முதல் செய்து மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு ஏற்று மதி செய்து வருகின்றன. இப்பாசி மூலம் பிரித்தெடுக்கப்படும் மூலப்பொருள் குளிர்பானம், அழகு சாதன பொருட்கள், மருந்து, வாசனை திரவியங்கள், ஜெல்லி மிட்டாய், பற்பசை, ஐஸ் கிரீம், சாக்லேட் உள்பட 240 வகை உணவுப் பொருட்கள் தயாரிப்பில் சுவையூட்ட பயன்படுத்தப்படுகிறது.
ஆண்டுக்கு 5 முறை சாகுபடி செய்யப்படும் கடற்பாசியின் வீரியம் குறைவு பருவகால மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் முன்வந்தது. மத்திய, மாநில அரசின் 60: 30 என்ற விகிதாச்சாரத்தில் நிதி வழங்கி கடற்பாசி வளர்ப்பை ஊக்கப்படுத்தி வருகிறது. தமிழக மீன்வளத்துறை மூலம் 750 பேருக்கு பயிற்சி அளித்து 6,600 மிதவை மூங்கில், விதை பாசி வழங்கி வளர்க்கப்பட்ட 510 டன் கடற்பாசி உற்பத்தி செய்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மந்திரியின் மீன்வளர்ப்பு திட்டத்தில் 10 ஆயிரம் பேரை இணைத்து கடற்பாசி வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீனவ மகளிரிடம் இருந்து கடற்பாசியை கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்களின் தலையீடுகளை தடுக்க மீன்வளத் துறை மூலம் பாசி அரவை நிலையம் ஏற்படுத்தப்பட்டு உலமாவூர், குதக்கோட்டை ஆகிய இடங்களில் கடற்பாசி பதப்படுத்தும் நிலையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.