பாலிஷ் செய்வதாகக்கூறி மோசடி: மரத்தில் கட்டி வைத்து இளைஞருக்கு தர்ம அடி
பாம்பன் மீனவ கிராமத்தில் பாலிஷ் செய்வதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை மரத்தில் கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
HIGHLIGHTS
பாம்பனில் நகையை பாலிஷ் செய்வதாக கூறி, ரசாயன தண்ணீரை பயன்படுத்தி, நகையை திருடி, தப்ப முயன்ற வட மாநில இளைஞர் ஒருவரை பிடித்த ஊர் மக்கள் தென்னை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து பின் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய ஒருவனை பாம்பன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பாரதியார் பகுதியில், வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள், நகை பாலிஷ் செய்வதாக கூறி வந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த சங்கரி, என்பவர் 4 பவுன் தங்க தாலி சங்கிலியை பாலிஷ் செய்ய கொடுத்துள்ளார். அவர்கள் அதனை ரசாயன தண்ணீரில் பாலீஸ் செய்த போது, செயின் பல துண்டுகளாக உடைந்திருந்தது. எடையின் அளவு பாதியாக குறைந்து 13 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சங்கரி அந்த இளைஞர்களிடம் நகை எடை குறைந்தது குறித்து கேட்ட போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முறனாக பதிலளித்துடன் ரசாயன தண்ணீரை பயன்படுத்தி நகையின் ஒரு பகுதியை திருடி தப்ப முயன்றுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த சங்கரி கூச்சலிட்டுள்ளார். தகவல் அறிந்த அப்பகுதியினர் வருவதற்குள் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான் மற்ற ஒருவரை பிடித்த பொது மக்கள் தென்னை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து விசாரித்ததில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் குமார், குண்டன் குமார் ராம் என்பது தெரிய வந்ததது.
மேலும், தாங்கள் இருவரும் வெள்ளி, தங்க நகைகளை பாலீஷ் போடும் பவுடர் விற்க வந்தாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிடிப்பட்ட குண்டன் குமார் ராமை போலீசிடம் ஒப்படைத்தனர். ரசாயன தண்ணீரை பயன்படுத்தி நகையின் ஒரு பகுதியை திருடி தப்பி சென்ற பிபின் குமாரை பாம்பன் போலீசார் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பாம்பன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.