55 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மீனவர்கள் 55 பேரையும் 8 விசைப்படகையும் விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 55 பேரையும் 8 விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே ஆண்கள் பெண்கள் கைக்குழந்தையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 விசைப்படகையும் 43 மீனவர்களையும் அதேபோல நேற்று காலை மண்டபம் தென் கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 2 படங்களையும் 12 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் விசாரணைக்கு பின்னர் ராமேஸ்வரம் சேர்ந்த 43 மீனவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 43 மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் வருகின்ற 31ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மீதமுள்ள மண்டும் பகுதியை சேர்ந்த 12 மீனவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர், ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்று ஒரே நாளில் 8 படகு மற்றும் 55 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த மீனவர்களின் கைதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் , இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ள மீனவர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும், மீனவர் விஷயத்தில் அக்கறை செலுத்தாத மத்திய மாநில அரசைக் கண்டித்தும், மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கையுடன் பேச்சுவார்த்தை சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் படத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரம்பரிய பகுதியான கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும், இலங்கையில் உள்ள மீனவர்களின் சேதமடைந்த படகுக்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்களது ஆண்கள் பெண்கள் கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது மீனவர்கள் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு இலங்கை அரசுடன் பேசி நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்பது ஒட்டுமொத்த வினரின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல ஐந்தாண்டுக்கு, பத்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும் மீனவர்களின் பிரச்சினை தீர்ந்த பாடில்லை என மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். மேலும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தொழிலில் நேரடியாக 5000க்கும் மேற்பட்ட மீனவர்களும், இந்த இந்த தொழிலில் சார்பு தொழிலாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் வேலை மற்றும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.