பணி நீட்டிப்பு செய்ய மாற்றுத்திறனாளியிடம் கை நீட்டிய நூலகர் கைது
ராமநாதபுரத்தில் பணி நீட்டிப்பு செய்ய மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய நூலகர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
பணி நீட்டிக்க கை நீட்டிய நூலகர் கண்ணன் கைது.
ராமநாதபுரம், பட்டிணம்காத்தான் ஊராட்சி அலுவலகம் அருகே மாவட்ட நூலகம் தரை தளத்திலும், மாவட்ட நூலக அலுலகம் முதல் தளத்திலும் உள்ளது. அலுவலக முதல் நிலை நூலகர் கண்ணன்55, மாவட்ட நூலக பொறுப்பு அலுவலராக கடந்த 2017ம் ஆண்டு முதல் பணியில் உள்ளார்.
மாவட்ட அளவில் 87 நூலகங்கள் உள்ளது. அனைத்து நூலகங்களுக்கும் பணியாளர்கள் நியமனம், பல்வேறு பதிப்பகங்களிலிருந்து வரும் புத்தங்களை பிரித்து அனுப்புவது, நூலகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்டவை மாவட்ட நூலகரின் பணியாகும். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே மல்லல் கிராம ஊரக நூலகத்தில் தற்காலிக நூலகராக ( மாற்று திறனாளி) செந்தில்குமார்(34). கடந்த 2014ம் ஆண்டு முதல் தினக்கூலியாக பணி செய்வதாகவும் தனது தற்காலிக பணியை நீட்டிப்பு செய்ய ராமநாதபுரம் மாவட்ட மைய நூலக (பொறுப்பு) அலுவலர் கண்ணனிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு கண்ணன் முதலில் 50ஆயிரம் கேட்டுள்ளார். நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். இரண்டு குழந்கைள் உள்ளது. என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறிய நிலையில் இறுதியாக 30ஆயிரம் பணம் கொடுத்தால் பணி நீட்டிப்பு. இல்லை என்றால் வேறு ஆளை நியமிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் முதலில் 5ஆயிரம் கொடு என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மாற்று திறனாளி செந்தில் தன் உறவினர்கள், நண்பர்கள் என கடன் வாங்கியும் தன் மனைவி சிறுசிறுக சேமித்து வைத்திருந்த ரூ.4500 என சேர்த்து எடுத்துக்கொண்டு ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.5ஆயிரம் பணத்துடன் செந்தில் குமார் நேற்று பிற்பகல் மாவட்ட நூலகத்துக்கு சென்று பணம் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மாற்று திறனாளியான செந்தில் மாடிப்படி ஏறி வர முடியாது என கூறிய நிலையில், கண்ணன் தன் அறையிலிருந்து கிழே வந்து பணத்தை வாங்கியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு உன்னி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் ஆகியோர் கண்ணனை கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட நூலக அலுவலகத்தில் முதற்கட்ட விசாரணை நடத்தினர். தொடர்ந்து மதுரை ஆனையூரில் உள்ள கண்ணன் வீட்டில் சோதனை நடத்தினர். பணி நீட்டிப்பு செய்வதற்கு ஊரக நூலகரிடம் ரூ.5 ஆயிரம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிவகங்கை சிறையில் அடைக்கப்பட்டார்.
மாவட்ட நூலகர் கண்ணன் பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும், மேலும் தற்காலிக பணி செய்யும் பெண் நூலகர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். பொறுப்பு மாவட்ட நூலகர் லஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.