மன்னார் வளைகுடாவை கண்காணிக்க அதி விரைவு படகுகள் வருகை
இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியை கண்காணிக்க இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 அதிவிரைவு படகுகள் வருகை தந்தன.
பாம்பன் தென் கடல் பகுதியில் உள்ள மன்னார் வளைகுடா தீவுப் பகுதி வழியாக கடந்த சில மாதங்களாக இலங்கையிலிருந்து அந்நிய நபர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவலும், இந்தியாவிலிருந்து போதைப் பொருள்கள், மஞ்சள் மற்றும் உணவுப் பொருள்கள் இலங்கைக்கு கடத்திச் செல்வதும், அதேபோல் அங்கு இருந்து தங்கம் கடத்தி வருவதும், இங்கு அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்வது தொடர் நிகழ்வாக உள்ளது. இது போன்ற சமூக விரோத செயல்களை தடுக்க இந்திய பகுதியின் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த சென்னையிலிருந்து இந்திய கடற்படையின் அதிவிரைவு இரண்டு படகுகள் பாம்பன் குந்துகால் துறைமுகத்திற்கு வந்து.
அந்தப் படகுகளில் இன்று முதல் கண்காணிப்பு பணியினை கமாண்டர் ஷியாம் சுந்தர் துவங்கி வைத்ததுடன் படகில் சென்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுப் பகுதிகளை பார்வையிட்டார். இந்தப் படகு மணிக்கு சுமார் 100 முதல் 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் இரவு நேரங்களில் நீண்ட தூரத்திற்கு கண்காணிக்கும் விதமாக 2 மின் விளக்குகள், இரவிலும் கண்காணிக்க வசதியாக ரேடார் வசதிகள் என அனைத்து சிறப்பம்சங்களும் இந்த படகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.