புதுக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு சீல்: நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த பூ மார்க்கெட்டிற்கு நகராட்சி சீல் வைத்து நடவடிக்கை.
HIGHLIGHTS
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தின் அருகே பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த பூ மார்க்கெட்டில் காலை வேளைகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பல்வேறு இடங்களில் விவசாயிகளால் பயிரிடப்பட்ட மல்லிகைப்பூ, கனகாம்பரம், பிச்சிப்பூ, அல்லிப்பூ உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் ஏலத்திற்கு வரும் அதே போல் பல்வேறு ஊர்களிலிருந்தும் விற்பனைக்காக பூக்கள் கொண்டு வரப்பட்டு வியாபாரம் மற்றும் ஏலம் விடும் பணி நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை வேளையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூ வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக கூடுவார்கள்.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சினிமா தியேட்டர் வணிக நிறுவனங்கள் சலூன் கடைகள் என அனைத்தும் செயல்பட தடை விதித்துள்ளது.
அதன்படி இன்று காலை புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பூ மார்க்கெட்டில் நோய்தொற்று பரவக்கூடிய சூழ்நிலை அதிக அளவில் பொதுமக்கள் கூடியதால், நகராட்சி சார்பில் இன்று பூ மார்க்கெட் சுற்றி தகரங்கள் அடைக்கப்பட்டு சீல் வைத்து நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். முறையாக தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாத பூ மார்க்கெட்டிற்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.