பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகள்: வழிகாட்டுதல்கள் வழங்கும் கூட்டம்
பள்ளி மேலாண்மைக்குழுவினை சிறப்பாக செயல்படுத்துவதற்கு வழிகாட்டு தலைமையாசிரியர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவினை திறம்பட செயல்படுத்துதல் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்குதல் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் பள்ளிமேலாண்மைக் குழுவினை மாவட்டங்களில் திறம்பட செயல்படுத்துதல் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்குதல் கூட்டம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது: பள்ளி மேலாண்மைக் குழுக்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம், மாநில திட்ட இயக்ககத்தில் செப்டம்பர் 16 -இல் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வழங்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஒரு தலைமையாசிரியர் பள்ளி மேலாண்மைக்குழுவினை சிறப்பாக செயல்படுத்துவதற்கு வழிகாட்டு தலைமையாசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மேலாண்மைக் குழுவினை சிறப்பாக வழிநடத்தும் தலைமையாசிரியரால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வழிகாட்டுக்குழு தலைமை ஆசிரியர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழுவினை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவார்.
பள்ளி மேலாண்மைக் குழுவின் நோக்கம் என்னவெனில், பள்ளியின் தேவைகளை அறிந்து அதனை திட்டமிட்டு சமுதாயப் பங்களிப்போடு அவற்றை நிறைவேற்றி குழந்தைகளுக்கு தரமான கல்வியினை அளிப்பதையும் திட்டச் செயல்பாடுகளைக் கண்காணித்து கருத்துகள் வழங்குவதாகும் என்றார் முதன்மை கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தி.
கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் இரஜேந்திரன், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வம், இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு ஆகியோர் பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்புகள்,கடமைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் பள்ளித்துணை ஆய்வாளர்கள் குருமாரிமுத்து,செல்வம் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 19 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியின் கருத்தாளராக வழிகாட்டு குழு தலைமையாசிரியர் கருப்பையன் செயல்பட்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதம் செய்திருந்தார்.