மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே பொதுமக்கள், துர்நாற்றத்தைப்பொறுத்துக் கொண்டுதான் தேங்கியுள்ள நீரில் நடந்து செல்கின்றனர்
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகராட்சியின் 40 -ஆவது வார்டுக்குள்பட்ட வட்டாபட்டி வள்ளியம்மாள் நகரில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரால் அப்பகுதி மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் கடந்த இரண்டுநாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் புதைசாக்கடை கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்பதால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 40 -ஆவது வார்டில் வட்டாபட்டி வள்ளியம்மாள் நகர் உள்ளிட்ட 5 தெருக்கள் உள்ளன . இது நகராட்சியின் தாழ்வான பகுதி ஆகும்.இந்நிலையில் புதுக்கோட்டையில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்து வரும் தொடர் மழையால், இந்த பகுதியில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது .மேலும் புதை சாக்கடை திட்ட கழிவுநீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு பாதாள சாக்கடை திட்ட கழிவு நீர் வெளியேறி மழைநீருடன் கலந்து அந்த பகுதி முழுவதும் சூழ்ந்து உள்ளதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரவேண்டிய பொதுமக்கள், துர்நாற்றத்தைப் பொறுத்துக் கொண்டுதான் தேங்கியுள்ள நீரில் நடந்து செல்கின்றனர். ஒவ்வொரு மழைக் காலத்தின் போதும் இது போன்ற பிரச்சனை தங்களுக்கு ஏற்படுவதாகவும், இதனை நிரந்தரமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதை சாக்கடை திட்ட பணிகள் முடிவுற்று பல ஆண்டுகள் ஆகியும், புதைசாக்கடை கழிவு நீர் மழைநீருடன் தாழ்வான பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிகழ்வு தொடர்கதையாகயானதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்