மறு உடற்கூராய்வுக்காக புதைக்கப்பட்ட மீனவரின் உடல் மீண்டும் தோண்டி எடுப்பு
ராஜ்கிரணின் உடலை மீண்டும் மறு உடற்கூராய்வு செய்து வரும் 24 ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
HIGHLIGHTS
மீனவர் ராஜ்கிரணின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக எழுந்த விவகாரத்தில், மறு உடற்கூராய்வுக்காக உடல் தோண்டி எடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினதிலிருந்து கடந்த 18ம் தேதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய எல்லை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்ப்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சுரேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை, ரோந்து கப்பலால் மோதி சேதப்படுத்தினர். இதில் படகு முழுவதுமாக கடலில் முழ்கியதில், படகு ஓட்டுனர் ராஜ்கிரண் மாயமானார். உடனிருந்த சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய மீனவர்களை இலங்கை கடற்ப்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி மாயமான மீனவர் ராஜ்கிரன் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசிடமிருந்து தகவல் கிடைத்து. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 23ம் தேதி இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை இரு நாட்டு எல்லை பகுதிக்கு வந்த இலங்கை கடற்ப்படையினர், ஆவணங்கள் சரிபார்த்த பிறகு இந்திய கடற்ப்படையினரிடம் இறந்த மீனவரின் உடலை ஒப்படைத்தனர்.
இதையடுத்து இந்திய கடற்ப்படையினர், கோட்டைப்பட்டினதிலிருந்து சென்ற மீன்வளத்துறை அதிகாரிகளிடம் உடலை ஒப்படைத்தனர்.உடலை பெற்றுக்கொண்ட மீன்வளத் துறை அதிகாரிகள் குழுவினர் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட ராஜ்கிரணின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக சிறிது நேரம் வைக்கப்பட்டு
பின்பு ராஜ்கிரணின் உடல் கோட்டைப்பட்டினம் துணை மின் நிலையம் அருகே உள்ள மயானக் கரையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜ்கிரணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மனைவி பிருந்தா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதியரசர் ஜி. ஆர். சாமிநாதன், அடக்கம் செய்யப்பட்ட ராஜ்கிரணின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறு உடற்கூராய்வு செய்து, அதன் அறிக்கையை வரும் 24 ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் இன்று, கோட்டைப்பட்டினம் மயானக்கரையில் வட்டாட்சியர் ராஜா தலைமையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தடயவியல் அறிவியல்த்துறை மருத்துவர் தமிழ்மணி, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவர் சரவணன், மனைவி பிருந்தா சார்பில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற தடயவியல் துறை பேராசிரியர் சேவியர்செல்வசுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், ராஜ்கிரணின் மனைவி பிருந்த மற்றும் உறவினர்கள் முன்னிலையில், ராஜ்கிரணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது மனைவி பிருந்தா, பிருந்தாவின் தாய் மாமன் பழனிவேல் ஆகியோர் ராஜ்கிரணின் உடலை அடையாளம் காண்பித்தனர்.
ராஜ்கிரணின் உடல் தான் என உறுதி செய்த பிறகு காவல்த்துறை பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மறு கூராய்வுக்காக கொண்டு வரப்பட்டது. இங்கு ராஜ்கிரணின் உடல் மறு உடற்க்கூராய்வு அதன் அறிக்கையை வரும் 24 ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வட்டாட்சியர் ராஜா ஒப்படைக்கவுள்ளார்.