2 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரம்: அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்பட்டது
புவியின் இயற்பியல் மாற்றங்களால் நாளடைவில் அம்மரத்தில் உள்ள கனிம பொருட்கள் இறுகி புதைபடிமமாக மாறுகின்றன
HIGHLIGHTS
சுமார்2 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் கல்மரம் இன்று புதுக்கோட்டை அரசு அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் கடந்த 12ம் தேதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர் பாண்டியன் என்பவர் கள ஆய்வு மேற்கொண்டபோது அங்கு மர புதை படிமம் எனப்படும் கல்மரம் கிடைத்துள்ளது. 2 கோடி ஆண்டுகள் பழமையான மரமாக கருதப்படும் இந்த கல் மரத்தை பாண்டியன் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமியிடம் இன்று ஒப்படைத்தார்.
இதற்கு முன்னர் இது போன்ற கல் மரங்கள் கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவருக்கு முன்பு இதேபோன்ற ஒரு புதை படிவம் நரிமேடு பகுதியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டெடுக் கப்பட்டு புதுக்கோட்டை அரசு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை அரசு அருங்காட்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்த மர புதைபடிமம் எனப்படும் கல்மரம் தற்போது பொதுமக்களின் பார்வைக்காக காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இந்த கல்மரங்கள் குறித்து புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி கூறியதாவது: மரப் புதை படிமம் என்பது காலங்கள் செல்ல செல்ல, புவிக்குள் புதையுண்ட மரங்களில் இருந்து கரிமப் பொருட்கள் சிதைவடைந்து, புவியின் இயற்பியல் மாற்றங்களால் நாளடைவில் அம்மரத்தில் உள்ள கனிம பொருட்கள் இறுகி புதைபடிமமாக மாறுகின்றன. அக்காலத்தில் புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் பெரிய மரங்கள் காணப்பட்டதற்கு இந்த கல்மரம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. இதனை பொதுமக்களும் பார்வையிடுவதற்காக தற்போது அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.