140 ஆண்டுகள் ஆன மன்னர் கல்லூரி, நீதிமன்றம்: விரைவில் புதுப்பிக்கும் பணி
மன்னர் கல்லூரி நீதிமன்றங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் ரகுபதி பேச்சு.
HIGHLIGHTS
140 வருடங்கள் பழமை வாய்ந்த மன்னர் கல்லூரி நீதிமன்றங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார் அமைச்சர் ரகுபதி.
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் கணிதவியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கலந்துரையாடல் கூட்டம் இன்று கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.இந்த கலந்துரையாடல் நிகழ்விற்கு முன்னாள் மன்னர் கல்லூரி கணிதவியல் துறை மாணவரும் ,தமிழக சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில், கல்லூரி முதல்வர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேராசிரியர்கள் மற்றும் கணிதவியல் துறை முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லூரியில் தற்போது கணிதவியல் துறையில் படிக்கும் மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .
நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில்,மன்னர் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற முறையிலும் தற்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் இந்த கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளேன் .
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எந்த நிகழ்ச்சிக்கு நேரம் கொடுத்தாலும் அந்த நிகழ்ச்சி துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.தனக்காக யாரும் காத்திருக்கக் கூடாது தான் வந்து மற்றவருக்காக தான் காத்திருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல மனம் படைத்த முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.எனவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருக்கும் நாங்களும் அதே போல் அந்த பழக்கத்தை கடைபிடித்து வருகிறோம் .
என்னை பொறுத்தவரை எனக்காக யாரும் காத்திருக்க கூடாது. மற்றவருக்காக நான் காத்திருப்பது தவறில்லை என நினைப்பவன் நான். என்னைப் பொறுத்தவரை, கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு. இந்த மன்னர் கல்லூரிக்கு பெருமை சேர்த்த முன்னாள் மாணவனாக நானும் ஒருவனாக இருப்பேன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த மன்னர் கல்லூரி என்பது 140 ஆண்டுகள் வரலாற்றிற்கு சொந்தமானது. இந்த கல்லூரி பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பகுதி பொது மக்களின் விருப்பம்.
எனவே, இந்த மன்னர் கல்லூரி பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டு இன்னும் ஓரிரு வாரங்களில் அதற்கான பணிகள் பூமி பூஜைகள் போடப்பட்டு, பணிகள் துவங்கப்பட இருக்கிறது.மன்னர் கல்லூரி விரைவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்கள் அதுவும் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டது அந்த நீதிமன்றங்களும் பழமை தன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நான் அறிவிப்பை வெளியிட்டேன்.
அதற்கான மதிப்பிடும் தயார் செய்யப்பட்டுள்ளது நீதிமன்றமும் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் இன்னும் நூறாண்டு காலத்திற்கு கட்டிடங்கள் புதுப்பொலிவுடன் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக முதலமைச்சர் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் இட ஒதுக்கீடு செய்துள்ளார்.அது ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி படிப்பிற்கு பெரும் உதவியாக இருக்கும் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி .