ஊரடங்கு காலத்தில் உதவிக்கரம் நீட்டிய "நம்மால் முடியும் நண்பர்கள் குழு"
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகேயுள்ள செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அன்னதானமும் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் பங்குனி உத்திர திருவிழாவிற்காக வந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் மற்றும் சாமியார்கள் உணவின்றி பட்டினியால் பாதிக்கப்பட்டனர். பட்டினியால் வாடிய அவர்களுக்கு நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பில் நிதி திரட்டப்பட்டு அத்தியாவசிய பொருட்களான பால், பிஸ்கட், பிரட் உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது. மேலும் ஞாயிறு ஊரடங்கு காலத்தில் கோயிலில் அன்னதானம் நடக்காததால் கோயில் சார்பில் உணவு பொட்டலமாக வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.