மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள ஆடுதுறை கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் காலனி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதில் கடந்த 1910-ஆம் ஆண்டு முதல் ஐந்து தலைமுறைகளுக்கு மேல், இதுநாள் வரை காலனி பகுதியில் இருந்து மயானத்திற்கு செல்லும் பாதையை பயன்படுத்தி வருகிறோம். தற்பொழுது அதே ஊரைச் சேர்ந்த மலர்வண்ணன் என்பவர் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து விவசாய நிலமாக பயன்படுத்தி வருகிறார். மேலும் தற்போது அப்பகுதியில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக பாதையில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். மேலும் கல் சுவர் கட்டி மக்கள் போக முடியாதபடி அடைத்து விடுவார்கள் எனவே ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து பாதையை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கும் பொழுது, பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை ஆக்கிரமிப்பு செய்தவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பொழுது இப்பாதையை முறைகேடு செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை ஆகவே முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் மாவட்ட ஆட்சியரிடம் இந்த மனுவை அளித்துள்ளோம் என்றார்கள்.