ஓணம் பண்டிகைக்காக கேரளா சென்றுவந்த நாமக்கல் கலெக்டருக்கு தீவிர காய்ச்சல்
ஓணம் பண்டிகைக்காக, கேரளா சென்றுவந்த நாமக்கல் கலெக்டர் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்து வருகிறார்.
HIGHLIGHTS
.கேரள மாநிலத்தைச் சேர்ந்த, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கடந்த வாரம் முன் ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
சில நாட்கள் முன்பு நாமக்கலுக்கு திரும்பிய அவருக்கும், அவரது மகளுக்கும் தீவிர காய்ச்சல் இருந்தது. இதுகுறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவக்குழுவினர் கலெக்டருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதணை முடிவில் கலெக்டருக்கும், அவரது மகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அவர்களுக்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக உள்ளது.
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சென்ற வந்ததால் கலெக்டருக்கு காய்ச்சல் பாதிப்புடன் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் டாக்டர்களிடையே எழுந்தது.
பரிசோதணையில் தொற்று இல்லை என்று உறுதியானதால் டாக்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர். தற்போது கலெக்டர் வீட்டிலேயே ஓய்வில் இருப்பதால், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி கலெக்டர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.
இதுகுறித்து கலெக்டர் ஸ்ரேயா கூறியதாவது: கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில், தொற்று இல்லை என்பது உறுதியாகி விட்டது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல் வந்துள்ளது. தற்போது குடும்பத்தினர் அனைவரும் குணமடைந்து வருகிறோம். வரும் திங்கள்கிழமை முதல் மீண்டும் பணிகளைத் தொடருவேன் இவ்வாறு அவர் கூறினார்.