அரசை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு- மக்கள் அறிவிப்பு
நாகப்பட்டினம் அருகே சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கடந்த 9 ஆண்டுகளாக செய்து தராத தமிழக அரசை கண்டித்து சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினத்தை அடுத்துள்ள நாகூர் சந்திரா கார்டன் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர கோரி கடந்த 9 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து பலமுறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். நாகூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் அரசு அதிகாரிகளின் பார்வைக்காக தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகை வைத்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
படுமோசமான சாலையால் அவதியடைந்து வருவதாக கூறியுள்ள அப்பகுதி மக்கள், குடிநீர், பாதாள சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லல்படுவதாகவும், மழை காலங்களில் குளம் போல் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும், வேதனை தெரிவித்துள்ளனர். அதிகாரிகள், அமைச்சர்கள் என பலரிடம் நேரில் முறையிட்டும் இதுவரை பலன் இல்லாத காரணத்தால், வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.