கொரோனா நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய நாகை எம்.பி
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் நோய்த்தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி வழங்க பொதுமக்களுக்கு சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் திமுக அதன் கூட்டணி கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க வேண்டுகோள் விடுத்தார். இந்தநிலையில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளருமான செல்வராஜ் தனது ஒரு மாத ஊதியமான ஒரு லட்ச ரூபாயை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரிடம் வழங்கினார்.
மேலும் நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவு மூலம் சிகிச்சை பெற நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையை மக்கள் அதிக அளவில் நாடவேண்டியுள்ளதால், கடலோர மாவட்டமான நாகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிரிவை உடனே ஏற்படுத்த வேண்டும் தமிழக என அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.