நாகையில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை: கலெக்டர் உத்தரவு
நாகையில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதித்து மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கிராம ஊராட்சி செயலாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிப்பதற்காக நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேல் அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்திராமல் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களே முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மீனவர்கள் 14ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 புயல் பாதுகாப்பு கட்டிடம் 144 சமுதாயக்கூடம் , பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். பொதுமக்களை தங்க வைக்க கூடிய முகாம்களில் உணவு குடிநீர் மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பொதுப்பணித்துறை சார்பில் 20,000 மணல் மூட்டைகளும், 2000 வெள்ளத் தடுப்புக் கம்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆறுகளின் கரைகளை இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.