நிவாரணதொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை
மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதால், தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரண உதவித் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என நாகப்பட்டினம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கிழக்கு கடலோர மாநிலங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் துவங்குகிறது. இதையொட்டி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர், செருதூர் ஆகிய 64 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளை கரையேற்றும் பணியில் அப்பகுதி மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 61 நாட்களுக்கு கரையில் இருக்கும் மீனவர்கள் படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவரும் மீனவர்களுக்கு தமிழக அரசு மீன்பிடி தடைகால நிவாரணமாக ரூ. ஐந்தாயிரம் வழங்குகிறது.
இந்தத் தொகை போதாது என தெரிவித்துள்ள நாகை மீனவர்கள், மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை தமிழக அரசு 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் விசைப்படகு மற்றும் வலைகளை சீரமைக்க தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம் 5 லட்ச ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.