நாகையில் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு
தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசை கண்டித்து, நாகப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் மீனவர்கள் 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வந்தனர். தடை செய்யப்பட்ட வலை என்பதால், இதனை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க கூடாது என தமிழக அரசு சென்ற ஆண்டு தடை ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துவது குறித்த அவசர ஆலோசனை கூட்டம் இன்று நாகை மாவட்டம் நம்பியார்நகரில் நடைபெற்றது.
இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்காத தமிழக அரசை கண்டித்து, நம்பியார்நகர் மீனவர்கள் இன்று முதல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது. சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால் தேர்தல் நெருங்கும் வேளையில் பல கட்ட போராட்டங்களை நடத்தப் போவதாக நம்பியார் நகர் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.