வெளிநாட்டுப் பணி: கிருஷ்ணகிரி இளைஞர்களுக்கு அழைப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்கள் வெளிநாட்டுப் பணிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவத்துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் திறனுடைய, திறனற்ற பணியாளர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் பணி வழங்கும் நிறுவனங்கள் தங்கள் நாட்டின் மொழி மற்றும் மேம்படுத்தப்பட்ட திறன் உள்ள வேலைநாடுநர்களையே தேர்வு செய்கின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 500 செவிலியர்களுக்கு ஓஇடி தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஆரம்ப நிலை சம்பளம் வருடத்திற்கு ரூ.18 லட்சமாகும்.
இந்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தும் நோக்கில் செவிலியர்களை தேர்வு செய்யும் ஹெல்த் எஜூகேசன் இங்கிலாந்து நிறுவனத்துடன், வீட்டுப் பணியாளர்களை தேர்வு செய்யும் அல் டூரா மேன்பவர், குவைத் நாட்டுடன் மற்றும் இந்தியா டிரேட் மற்றும் எக்சிபிஷன் என்கிற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இணையதளத்தை பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் அதைப்பற்றிய விவரங்கள் அறிந்துக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த படித்த, வெளிநாட்டுப் பணி தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.