விற்பனை முனைய கருவி இயக்குவது குறித்த பயிற்சி முகாம்
கிருஷ்ணகிரியில் விற்பனை முனைய கருவி இயக்குவது, பழுது சரிசெய்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில், விற்பனை முனைய கருவி இயக்குவது மற்றும் பழுது சரிசெய்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமினை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் துவக்கி வைத்து, விற்பனை முனைய கருவியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் விஷன்டெக் தொழில்நுட்ப வல்லுநர் ஜெயக்குமார் பங்கேற்று, விற்பனை முனைய கருவி இயக்குவது மற்றும் விற்பனை முனைய இயந்திரத்தில் பட்டியலிடுவது தொடர்பான விவரங்களை தெரிவித்தார். இம்முகாமில் உரம் விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர்கள் கலந்துகொண்டனர். இதில் ஸ்பிக், கிரீன்ஸ்டார் நிறுவன விற்பனை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்த முகாமின் போது விற்பனையாளர்களுக்கு, உரம் விற்பனைமுனைய கருவி மூலம் மட்டுமே விவசாயிகளுக்கு, அவர்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்து, கைரேகை பதிவுடன் விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் வாங்கும் உரத்திற்கு தனித்தனியாக பட்டியல் வழங்க வேண்டும். விற்பனை செய்த மொத்த உரமும் ஒருவர் பெயரில் விற்பனை முனைய கருவி இயந்திரத்தில் பட்டியல் போடக்கூடாது. விவசாயிகள் உரம் வாங்க வரும் போது கண்டிப்பாக ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும். விற்பனை முனைய கருவி மூலம் விற்பனை செய்த உரத்திற்கான பட்டியலை நகல் எடுத்து, விற்பனை நிலையத்தில் ஆய்வுக்கு வரும் அலுவலர்கள் பார்வையிடும் வகையில் தேதி வாரியாக வைத்து பராமரிக்க வேண்டும். விற்பனையாளர்கள் தினமும் உரத்தின் ஆரம்ப இருப்பு மற்றும் முடிவு இருப்புகளை விற்பனை முனைய கருவி மூலம் பட்டியல் எடுத்து பராமரிக்கப்பட வேண்டும். விற்பனையாளர்கள் விற்பனை முனைய கருவிகளில் அவ்வப்போது செயல்படுத்தப்படும் தொழில்நுட்ப மேம்பாடுகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கடையின் இருப்பும், விற்பனை முனைய கருவியின் இருப்பும் நேர் செய்து, இருப்பு பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும். கடையின் இருப்பு மற்றும் விவரங்கள் அடங்கிய தகவவ் பலகை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் பராமரிக்க வேண்டும். அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். இது தொடர்பாக கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) மற்றும் வட்டார அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, விற்பனை முனைய கருவிகளை பயன்படுத்தாத விற்பனையாளர்களின் கருவி பறிமுதல் செய்து, உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.