கிருஷ்ணகிரி: விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
நெல், சிறுதானியங்கள் பயிர்வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையினை கொண்டு நெல், சிறுதானியங்கள், பயிர் வகை மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்கள் மூலமாக விதைப்பண்ணை அமைக்கலாம். இதை அமைக்க கருவிதைகள் மற்றும் ஆதார நிலை விதைகளை பயன்படுத்தலாம். இது, அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் கிடைக்கிறது.
விதை பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், விதை வாங்கும் போது தங்கள் பெயரில் உரிய ரசீது பெற்று கொள்ள வேண்டும். விதை மூட்டைகளில் உள்ள கருவிதைகளுக்கான மஞ்சள் அட்டைகள் மற்றும் ஆதார விதைகளுக்கு உண்டான வெள்ளை நிற சான்று அட்டைகளை தனியே எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணைகளை, விதைச்சான்ற அலுவலரால் பல்வேறு நிலைகளில், குறிப்பாக பூ பருவம் மற்றும் அறுவடை பருவம் ஆகிய நிலைகளில், வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு காலப்படமற்ற, இனத்தூய்மையுள்ள, நல்ல முளைப்புத்திறன் உள்ள தரமான சான்று விதைகள் உற்பத்திக்கு வழிவகை செய்யப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு அருகேயுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது கிருஷ்ணகிரி விதைச்சான்று இயக்குநர் அலுவலகத்தையோ அணுகி, விதைப்பண்ணை அமைத்து, அதிக வருவாய் பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.