கரூரில் தானியங்கி பூட்டு பொருத்திய கதவால் விபரீதம்:அறைக்குள் சிக்கிய குழந்தை
கரூரில் தானியங்கி பூட்டு அமைக்கப்பட்ட கதவு பூட்டி கொண்டதால் அறைக்குள் சிக்கிய குழந்தை அரை மணி நேரம் போராடி மீட்கப்பட்டது
HIGHLIGHTS
கரூரில் தானியங்கி பூட்டு உள்ள அறைக்குள் சிக்கிய ஒன்றரை வயது குழந்தையை சுமார் அரை மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் சேர்ந்தவர் சிவச்சந்திரன். தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தை தர்ஷித்துடன் கரூர் காளியப்பனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு தீபாவளி கொண்டாடுவதற்கு வந்தனர். நேற்று இரவு ஒன்றரை வயது தர்ஷித் உறவினர் வீட்டில் உள்ள அறை ஒன்றுக்கு சென்று கதவை வேகமாக சாத்தியதாக கூறப்படுகிறது.
வேகமாக சாத்தியதால், தானியங்கி பூட்டு உள்ள அறைக் கதவு தானாக பூட்டிக் கொண்டது. இதனால் குழந்தை அறைக்குள் சிக்கிக் கொண்டது. இதையடுத்து உறவினர்களும் உடனடியாக கதவை வெளியிலிருந்து திறக்க முடியாத காரணத்தால் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் ஜன்னல் வழியாக ஒரு குச்சியைக் கொண்டு ஆட்டோமேட்டிக் லாக்கை ஓபன் செய்து குழந்தையை மீட்டனர். சுமார் அரை மணி நேரம் பூட்டிய கதவுக்குள் குழந்தை அழுத நிலையில் இருந்ததைக் கண்டு பெற்றோர் பதற்றமடைந்தனர்..தீயணைப்பு துறையினர் அரை மணி நேரத்திற்குள் குழந்தை மீட்கப்பட்டதால் சிவச்சந்திரன் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.